'தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை' - நயினார் நாகேந்திரன்
- அனைத்து வகையிலும் இன்று தமிழ்நாடு தாழ்ந்து போயுள்ளது.
- கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன.
திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு , "கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. தற்போதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் அதுகுறித்து பேசப்படும்." என தெரிவித்தார்.
தேர்தலுக்குமுன் தவெக இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, அதுபற்றி அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்றார்.
இபிஎஸ்-ன் டெல்லிப் பயணம் தொடர்பான கேள்விக்கு, அதுகுறித்து இபிஎஸ் அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும்தான் தெரியும்.
அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சிக் கண்டுள்ளது என்ற முதலமைச்சரின் பேச்சுத் தொடர்பான கேள்விக்கு,
"எந்தெந்த துறைகள் என்றுக் கூறினால் கேட்கலாம். அனைத்து வகையிலும் இன்று தமிழ்நாடு தாழ்ந்து போயுள்ளது. கையில் புத்தகம் வைத்திருக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா உள்ளது. 2 வயது குழந்தைமுதல் வயதான பெண்கள்வரை நடமாட முடியவில்லை இன்று. தேசிய மகளிர் ஆணையம் 50% பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு எனக் கூறியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது. அதற்காகத்தான் இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
பண பலம், அதிகார பலத்தை அனைத்து இடத்திலும் கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட மக்கள் பலம்தான் பெரிது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும்." என தெரிவித்தார்.