மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க., அரசு மாறி விட்டது- கமல்ஹாசன் பேச்சு
- மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
- செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.
மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.
கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.
ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.
ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.