தமிழ்நாடு செய்திகள்

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை - வதந்தியால் பரபரப்பு: வீடியோ வெளியிட்ட வாலிபரிடம் போலீஸ் விசாரணை

Published On 2026-03-03 12:16 IST   |   Update On 2026-03-03 12:16:00 IST
  • வீடியோ காட்சி அந்த பகுதியில் உள்ள அனைவரது செல்போன்களிலும் பரவியது.
  • சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்தனர்.

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் பாலம் அருகே ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. காட்டுப் பகுதியான இங்கு நேற்று முந்தினம் இரவு அங்கு உள்ள பாலம் அருகில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக தகவல் பரவியது.

ரோட்டில் அமர்ந்து இருந்த சிறுத்தை திடீரென்று குடியிருப்பு பகுதியில் காம்பவுண்டு சுவரை தாவிகுதித்து சென்றதாக தகவல் பரவியது.

சிறுத்தை தாவி செல்வது போல ஒரு வீடியோ காட்சியும் அந்த பகுதியில் உள்ள அனைவரது செல்போன்களிலும் பரவியது.

இதனால் அங்கு உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இரவில் அனைவரும் சாலையில் குவிந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அவசர போலீஸ் உதவி நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனே விரைந்து சென்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்தனர். ஆனால் அப்படி எதுவும் சிறுத்தை நடமாடியதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிய வந்தது.

அதன் பிறகு இரவில் எடுக்கப்பட்ட அந்த செல்போன் வீடியோ காட்சியை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்த்தனர். அப்போது அது சிறுத்தை புலி அல்ல பெரிய காட்டுப் பூனை என்று தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

அந்த காட்டு பூனையை சிறுத்தை என நினைத்து படம்பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பிய வாலிபர் யார் என போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் என்ற வாலிபர் காட்டுப் பூனையை படம் பிடித்து சிறுத்தை என்று பரப்பியது தெரியவந்தது.

டிரைவர் ஆக வேலை பார்த்து வரும் இம்ரான் கான் இரவில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது வழியில் காட்டுப் பூனை நின்றதை பார்த்து சிறுத்தை என நினைத்து செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். பிறகு அதை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அது அந்த பகுதி முழுவதும் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து இம்ரான் கானை விசாரித்த போலீசார் இனி இதுபோன்று உறுதியில்லாத தகவல்களை அனுப்பி வீண் வதந்தியை பரப்பக் கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். சிறுத்தை அல்ல புலி என்று உறுதியானதும் அந்த பொதுமக்கள் வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்கினர். இந்த சம்பவத்தால் போத்தனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News