தமிழ்நாடு செய்திகள்

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் - கிராம மக்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை

Published On 2026-03-03 11:52 IST   |   Update On 2026-03-03 11:52:00 IST
  • கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த சந்தேகப்படும்படியான 6 பேர் பிடிபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

மேலும் மர்மகும்பல் அருகில் உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திலும் புகுந்து அங்கிருந்த சிலரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு தப்பிச் சென்றது.

இந்த திடீர் தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜான் மார்க்(வயது 45) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா(50) என்ற செங்கல் சூளை தொழிலாளி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இச்சம்பவத்தில் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த நெல்சன்(45), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளத்தை சேர்ந்த கணேசன் (58), புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட 2 பேர் உடலையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த நெல்சன், கணேசன் ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் மற்றும் போலீசார் இரவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் கஞ்சா, மது போதையில் வெறியாட்டம் ஆடினார்களா? அல்லது திட்டமிட்டு இச்சம்பவத்தை நிகழ்த்தினார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தென் மணண்டல போலீஸ் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேற்று இரவோடு இரவாக நெல்லை வந்தார். அவர் நள்ளிரவில் பெரும்பத்து பகுதிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, தப்பிச் சென்ற மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த பயங்கர சம்பவத்தால் நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பெரும்பத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நேற்று இரவு முதலே நாங்குநேரியில் இருந்து மஞ்சங்குளம், பெரும்பத்து வழியாக ஏர்வாடி பகுதிக்கு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2-வது நாளாக அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவை மூலமாக போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த சந்தேகப்படும்படியான 6 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து சாலையில் திரண்ட பெரும்பத்து கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று மதியத்திற்குள் குற்றவாளிகள் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News