தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? - மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை
- டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளை கேட்டதாகவும், தி.மு.க. தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் என சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் தயார் நிலையில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரசின் கோரிக்கையை ஏற்க தி.மு.க. தலைமை மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கூட்டணியை தக்கவைக்க கடைசி வாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எம்.பி. கனிமொழி, செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் முதலமைச்சரை ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.