தமிழ்நாடு

தற்போதைய எம்.பி.க்கள் 6 பேருக்கு வாய்ப்பு வழங்காத திமுக

Published On 2024-03-20 06:44 GMT   |   Update On 2024-03-20 07:43 GMT
  • 21 பேர் கொண்ட பட்டியலில் 11 பேர் புதுமுகம்.
  • பொன்முடி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 21 பேரில் 11 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.

வடசென்னை- கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி, வேலூர் கதீர் ஆனந்த், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் போன்ற பிரபலங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, தருமபுரி தொகுதியில் செந்தில், தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் திமுக-வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுமுகம் தேவை என கட்சி விரும்பியதால் தற்போது பழனி மாணிக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட திமுகவினர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை விரும்பவில்லை. அவருக்கு எதிராக கட்சிக்காரர்களிடையே எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.

தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், அமைப்பு ரீதியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முழுமையாக சட்டமன்ற இடங்களை இழந்த மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. இதனால் தருமபுரியில் கட்சியின் அமைப்புகளை வளர்க்க தவறியதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் சேலம் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன், தென்காசி தொகுதியில் தனுஷ் எம்.குமார், பொள்ளா்சியில் சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News