நீடிக்கும் சர்ச்சை - கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் நாளை அவசர ஆலோசனை
- காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது.
- தி.மு.க.வும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அமைதி காக்கிறது.
சென்னை:
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலை போல் 25 தொகுதிகளை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளதால் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதிப்பங்கீட்டை முடிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைத்ததும் பேசி முடிவு செய்யலாம் என்று தி.மு.க.தரப்பில் கூறப்பட்டது. எனவே பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 5-ந்தேதிக்குள் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கும்படி காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரீஷ்சோடங்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க. தரப்பில் அதை கண்டு கொள்ளவில்லை.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை அடிமட்ட தொண்டர்கள் முதல் ஒவ்வொரு மட்டத்திலும் எதிரொலிக்கவும் தொடங்கி உள்ளது. புதுவையில் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை காங்கிரசை அழைக்காமலேயே தி.மு.க. நடத்தியது. பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரசுடன் தி.மு.க. எம்.பி.க்கள் கை கோர்க்கவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் -த.வெ.க. இடையேயும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் 70 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு வழங்க த.வெ.க. முன்வந்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் த.வெ.க. தரப்பிலும், உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் உடனே சொல்லுங்கள். 14-ந்தேதிக்கு பிறகு நாங்கள் வேட்பாளர் தேர்வுக்கு செல்ல வேண்டி உள்ளது என்று காங்கிரசிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
ஆனால் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது. தி.மு.க.வும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அமைதி காக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரை ராகுல் அழைத்து விவாதித்துள்ளார். அப்போது கூட்டணியை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள், கட்சியின் பலம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை அவர் விவாதித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக ராகுல்காந்தி நாளை டெல்லியில் கே.சி. வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்போவதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனைக்கு பிறகு ராகுல்காந்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் வருகிற 10-ந்தேதி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்ட 692 மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி பட்டறை டெல்லியில் நடக்கிறது. இதில் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். டெல்லியில் அவர்களையும் அழைத்து மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கூட்டணி சர்ச்சைகளுக்கு முடிவு வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.