பிரேமலதா விஜயகாந்த் பற்றி அவதூறு: டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்
- தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை :
தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சார்பில், தே.மு.தி.க. வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சந்தோஷ்குமார் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பற்றியும் தே.மு.தி.க. பற்றியும் யூடியூப் தளங்களில் சிலர் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள்.
இத்தகைய அவதூறு பேச்சுகள், தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்ற திருச்சி சூர்யா, தமிழா தமிழா, பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.