தமிழ்நாடு செய்திகள்

பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர்- ஆசிரியர்களை திமுக ஏமாற்ற முடியாது: அன்புமணி

Published On 2026-02-07 17:43 IST   |   Update On 2026-02-07 17:43:00 IST
  • முதலமைச்சருக்கு பாராட்டு விழா என்பது எதுவுமே செய்யாதவருக்கு எல்லாம் செய்த சாதனையாளர் விருது வழங்குவதற்கு ஒப்பான நகைச்சுவை.
  • உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசு அறிவித்தது. அதுவே ஓர் உருப்படாத திட்டம்தான்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்த திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போர்வையில் நன்றி அறிவிப்பு மாநாடு என்ற பெயரில் நாளை ஓர் நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நன்றி அறிவிப்பு என்ற கைகுட்டையைக் கொண்டு அதை அடக்க முடியாது.

முதலமைச்சருக்கு பாராட்டு விழா என்பது எதுவுமே செய்யாதவருக்கு எல்லாம் செய்த சாதனையாளர் விருது வழங்குவதற்கு ஒப்பான நகைச்சுவை ஆகும். 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராடினார்கள். அவர்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசு அறிவித்தது. அதுவே ஓர் உருப்படாத திட்டம்தான். அதுவும் கூட அறிவிக்கப்பட்டு 35 நாள்களாகியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு பணியாளர்கள், டாஸ்மாக் தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என பலரும் இன்னும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது குரூரமான நகைச்சுவை ஆகும்.

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அப்பட்டமான துரோகங்களை செய்யும் திமுக, அவர்களுக்கான அமைப்புகளில் உள்ள தங்களின் ஆதரவாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி பாராட்டு விழா நடத்துவதை காலம் காலமாகவே வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஆனால், இதுவெல்லாம் எடுபடாது.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்த தலைமைச் செயலக ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அதன் உறுப்பினர்கள் கொந்தளித்ததைப் போல ஆளும் திமுகவுக்கு துதி பாடும் நிர்வாகிகளுக்கு எதிராகவும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொந்தளிக்கப் போவது உறுதி.

அடுக்கடுக்கான துரோகங்களால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொதிப்படைந்துள்ள நிலையில், இந்த பாராட்டு விழா படுதோல்வி அடையும் என்பதை ஆட்சியாளர்களும் அறிவார்கள். அதனால்தான் அரசு ஊழியர்களின் நன்றி அறிவிப்பு மாநாடு என அறிவித்து விட்டு, அதில் பங்கேற்க திமுக-வினரை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களை அழைத்து வருவதற்காக தனியார் பள்ளிகளில் இருந்து மாவட்டத்திற்கு 20 பேருந்துகளை அனுப்பி வைக்கவும், தனியார் பள்ளி ஆசிரியர்களை பங்கேற்க செய்யச் சொல்லியும் தனியார் பள்ளி இயக்குனர் மூலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அதனால் மாவட்ட கல்வி அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்னதான் வான்கோழி இறகை விரித்தாலும் கான மயிலாக முடியாது. அதேபோல், கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, அரசு ஊழியர் அமைப்புகள் பெயரில், திமுகவே பாராட்டு விழாக்களை நடத்தினாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற முடியாது. நம்ப வைத்து துரோகம் செய்த திமுகவை வரும் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழிதீர்க்கப் போவது உறுதி.

இவ்வாறு அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News