தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வை சேர்த்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - திருமாவளவன் மீண்டும் திட்டவட்டம்

Published On 2026-02-07 14:25 IST   |   Update On 2026-02-07 14:25:00 IST
  • அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது.
  • ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

சென்னை:

தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

வட மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்தக் கட்சி 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.

அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் காரணமாக டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று தே.மு.தி.க.வும் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்த 2 கட்சிகளில் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அன்புமணி இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் ராமதாஸ் சேர மாட்டார். இதையடுத்து ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ம. க., பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் இடம் பெறாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இது போன்ற சூழலில் தான் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. இடம் பெறும் கூட்ட ணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் திருமாவளவன் அதனை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 2 கட்சிகளுமே பிளவுவாத அரசியலை செய்து வருகின்றன. இந்தக் கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் எப்போதும் நாங்கள் இருக்க மாட்டோம்.

ஒருவேளை ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால் நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News