தமிழ்நாடு

கோவையில் பிரமாண்ட கூட்டம்: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி பிரசாரம்

Published On 2024-04-04 09:48 GMT   |   Update On 2024-04-04 10:15 GMT
  • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
  • அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது,

அண்ணாமலைக்கு எதிராக ஆதரவு திரட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி வருகிற 12ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நெல்லையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து பேசும் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து 12ம் தேதி மாலையில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

கோவையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அண்ணா மலைக்கு எதிராகவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் பேச உள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., இணைந்து வருகிற 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 6-வது முறையாக வருகை தரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரபல தலைவர்கள் யாருமே பிரசாரத்துக்கு வராமலேயே இருந்தனர்.

இந்த நிலையில் தான் ராகுல்காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ராகுல்காந்தி வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News