மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படும்- ப.சிதம்பரம் சொல்கிறார்
தேவகோட்டை:
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி 18 வயது முதல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து வருகிறார். பெரியார் இல்லையென்றால் சுயமரியாதை திருமணங்கள் நடந்திருக்காது. பெரியாரை இழிவாக பேசுபவர்கள் உண்மையான தமிழர்களாகவே இருக்க மாட்டார்கள்.
ரெயில்வே துறையில் கடைநிலை ஊழியர் வேலைக்கு உயர்கல்வி படித்த இளைஞர்கள் கூட விண்ணப்பிக்கும் அவலநிலை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்ததே கிடையாது.
100 நாள் வேலை வாய்ப்பை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செய்து காட்டியது காங்கிரஸ் அரசு. ரூ.65 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்ததும் காங்கிரஸ் அரசு தான். ஏழை மக்களுக்காக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது மக்களின் கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #pchidambaran #modi #centralgovernment