செய்திகள்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

Published On 2018-11-26 10:10 GMT   |   Update On 2018-11-26 10:10 GMT
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #gajacyclone #fishermen

வேதாரண்யம்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு நாகை மாவட்டம வேதாரண்யம், செறுதலைக்காடு, கடினவயல், ஆதனூர் ஆகிய இடங்களுக்கு சென்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

செறுதலைக்காடு மீனவ கிராமத்தில் புயலில் சேதமான படகுகளை பார்வையிட்டார். வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.சி. சார்பில் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

மீனவர்களின் படகுகள் அதிகமாக சேதமடைந்துவிட்டதால் அவைகளை பழுது பார்த்து பயன்படுத்தமுடியாது. எனவே அவர்களுக்கு புதுப்படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படகுகளை வழங்கும் வரை மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படுவதுபோல் உதவித்தொகை வழங்கவேண்டும். புயலில் சேதமான வீடுகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.

புயல் சேத பகுதிகளில் வெளியாட்களை அழைத்து வந்து நிவாரணப்பணிகளை செய்வதை விட அந்தந்தப் பகுதி இளைஞர்களை கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் நிவாரண பணிகள் விரைவில் முடியும். காங்கிரஸ் நிதிகமிட்டி கூட்டம் டிசம்பர் 8-ந்தேதி நடக்கிறது. இதில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #fishermen

Tags:    

Similar News