செய்திகள்

சென்னிமலை அருகே மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

Published On 2018-06-01 09:56 IST   |   Update On 2018-06-01 09:56:00 IST
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடும்ப தகராறு காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் சக்தி நாதன். பெயிண்டராக வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி உமா மகேஸ்வரி (35). மகன் யுவராஜ் (14). 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகள் பெயர் பூஜா (12). 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறார்.

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் உமா மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உமா மகேஸ்வரி தனது 2 பிள்ளைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பிறகு தானும் வி‌ஷம் குடித்தார்.

சிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் குழந்தைகளையும் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உமாமகேஸ்வரி, மகன் யுவராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரியின் சொந்த ஊர் கரூர் அடுத்த நத்தமேடு ஆகும். இவரது முதல் கணவர் சுந்தர் ராஜன். இவர் உமா மகேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இவர்களது வீட்டில் சக்தி நாதன் குடியிருந்து வந்தார். கணவர் பிரிந்து சென்றதும் சக்திநாதனை 2-ம் திருமணம் செய்து கொண்டு சென்னி மலையில் உமா மகேஸ்வரி புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் 2-வது கணவருடனும் ஏற்பட்ட தகராறில் உமா மகேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
Tags:    

Similar News