WPL தொடரை 2-வது முறையாக வென்ற RCB மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு
- டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை ஆர்சிபி பதிவு செய்தது.
- ஒரே நேரத்தில் IPL மற்றும் WPL கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக ஆர்சிபி புதிய சாதனையை படைத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி, டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை பதிவு செய்ததுடன், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. மேலும், ஒரே நேரத்தில் ஐபிஎல் மற்றும் டபிள்யூ.பி.எல் கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக பெங்களூரு புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது ஐபிஎல் கோப்பையும் பெங்களூரு அணியிடம் உள்ளது.
இந்நிலையில் 2-வது முறையாக WPL தொடரை வென்ற RCB மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைபடக்கூடிய மிகப்பெரிய வெற்றி இது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அணியினர் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள் என கூறினார்.