இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜூன் 6-ந் தேதி இங்கிலாந்து புறப்படும் இந்திய அணி
- லீக் ஆட்டத்துடன் வெளியேறும் அணியில் உள்ள வீரர்கள் ஜூன் 6-ம் தேதி பயிற்சியாளர் கம்பீருடன் புறப்படுவார்கள்.
- இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 20-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித், விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை நாளை பிசிசிஐ இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் பிசிசிஐ நாளை ஆலோசனை நடந்த உள்ளது . ஆலோசனைக்கு பிறகு புதிய கேப்டன் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடுவதற்காக ஜூன் 6-ந் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்துடன் இருந்து வெளியேறும் அணியில் உள்ள வீரர்கள் ஜூன் 6-ம் தேதி பயிற்சியாளர் கம்பீருடன் புறப்படுவார்கள்.
மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து புறப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.