50 ஓவரில் அதிக ரன்கள் குவித்து வரலாறு படைத்த பீகார் அணி
- விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பீகார்- அருணாச்சல பிரதேசம் அணி விளையாடி வருகிறது.
- முதல் பேட்டிங் செய்த பீகார் அணியில் 3 பேர் சதம் விளாசினர்
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் சூர்யவன்ஷி 190, சகிபுல் கனி 128, ஆயுஷ் லோஹருகா 116, பியூஷ் சிங் 77 ரன்கள் விளாசியுள்ளனர்.
இதனால் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்தது. அதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இன்று அந்த வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.