ஜெய்ஸ்வால், விராட் கோலி அசத்தல்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.
விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.