கிரிக்கெட் (Cricket)

ENGvIND 4th Test: போராடிய இந்திய வீரர்கள்: வேறுவழியின்றி டிரா செய்த இங்கிலாந்து

Published On 2025-07-27 22:25 IST   |   Update On 2025-07-27 22:25:00 IST
  • இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்தது.
  • சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தினர்.

மான்செஸ்டர்:

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசி களைத்துப் போயினர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.

இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News