null
தோனியா? கோலியா? கவுர் அளித்த பதிலால் அதிர்ந்த அரங்கம்.. அடுத்த நொடி அமைதியாக்கிய மந்தனா
- சென்னை வந்த கவுருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கவுர், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர்.
இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோலி இவர்களில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
அதனை தொடர்ந்து தோனி, ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என கேள்வி எழுப்ப மந்தனா என பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.