கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா

Published On 2025-10-22 23:03 IST   |   Update On 2025-10-22 23:03:00 IST
  • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 244 ரன்கள் எடுத்தது.

இந்தூர்:

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தூரில் இன்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. டாமி பியூமாண்ட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 78 ரன்களில் அவுட் ஆனார். அலைஸ் காப்சி 38 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஆஷ்லே கார்ட்னர், சோபி மொலினுக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். இதனால் 64 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அன்னபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஆஷ்லே கார்ட்னர் சதமடித்து அசத்தினார். அவர் 73 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்னபெல் சதர்லேண்ட் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 40.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

Tags:    

Similar News