வழிப்பறியில் ஈடுபட வெடிகுண்டுடன் பதுங்கியிருந்த பிரபல ரவுடி கூட்டாளிகள்
- போலீசாரை கண்டதுடன் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.
- ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தேகப்படும்படி மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதுடன் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் போலீசார் அந்த கும்பலை விரட்டி மடக்கி பிடித்தனர். இதில் 11 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் ஒரு நாட்டு வெடிகுண்டு, 3 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தனர். அந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டையை சேர்ந்த எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது 36), வினோபா நகரை சேர்ந்த ஜூட் அந்துவன் (36), முத்தியால்பேட்டையை சேர்ந்த எழிலன் (29), லாஸ்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி (24), சரண் (21), தீனா (22), பார்த்தசாரதி (23), அருண்மணி (25), கவுதம் (22), ஜீவா காலனியை சேர்ந்த மதன்ராஜ் (28), மற்றும் வானூரை சேர்ந்த அருண்குமார் (26) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம், நகைகளை பறிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.
மேலும் தப்பிச்சென்றவர்கள் கொட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரேம், கிருபா என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து வெடிகுண்டு தயாரித்தல், வழிப்பறி, ஆயுதச் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கைதான எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.