நாய் கடித்து இறந்த மாட்டின் பாலில் தயிர் பச்சடி.. சாப்பிட்ட 200 பேருக்கு ரேபிஸ் அபாயம்
- அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
- பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த கிராம மக்கள் 200 பேருக்கு ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வின்போது, வந்திருந்தவர்களுக்கு உணவுடன் ரய்தா எனப்படும் தயிர் பச்சடி பரிமாறப்பட்டது.
அந்த பச்சடியை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எருமையிடமிருந்து கறக்கப்பட்டது. அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
துக்க நிகழ்வு முடிந்து சில நாட்களில், அதாவது டிசம்பர் 26 அன்று, அந்த எருமை திடீரென உயிரிழந்தது. அது ரேபிஸ் நோய் அறிகுறிகளுடன் இறந்ததைக் கண்ட கிராம மக்கள், அதன் பாலைக் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தங்களுக்கும் நோய் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மூழ்கினர்.
தகவலறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர். பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமேஸ்வர் மிஸ்ரா கூறுகையில், "பொதுவாக பாலை நன்றாகக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை யாருக்கும் பாதிப்பு அறிகுறி தென்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.