இந்தியா

நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா?: கார்கேவிடம் கேள்வி எழுப்பிய தேவகவுடா

Published On 2024-02-08 15:56 GMT   |   Update On 2024-02-08 15:56 GMT
  • காங்கிரஸ்காரர்களிடம் இருந்து கட்சியைக் காப்பதற்காகவே பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தேன்.
  • காங்கிரஸ் கட்சியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என தேவகவுடா குறிப்பிட்டார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பங்கேற்றார்.

அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , வாழ்நாளின் இறுதியில் தேவகவுடா தனது அரசியல் போக்கை மாற்றிக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில், கார்கெவின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியதாவது:

கர்நாடக முதல் மந்திரியாக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க வேண்டும் என நான் கூறியபோது, எனது மகன் குமாரசாமியை முதல் மந்திரியாக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் 13 மாதங்களுக்குள் குமாரசாமியை நீக்கியது யார்? கார்கே அல்ல காங்கிரஸ் தலைவர்கள்.

என் மகன் காங்கிரசால் நீக்கப்பட்ட போதுதான், நான் என் மகனை பா.ஜ.க.வுடன் இணையுமாறு வலியுறுத்தினேன். இந்த காங்கிரஸ் கட்சி உன்னை வளர அனுமதிக்காது என்று என் மகனிடம் கூறினேன்.

மல்லிகார்ஜூன கார்கே அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக விரும்புகிறீர்களா? அதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றி நன்றாகத் தெரியும்.

சுமார் 35-40 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள தூய்மையான மனிதர் மல்லிகார்ஜூன கார்கே. ஆனால் பிரதமர் வேட்பாளருக்காக அவரது பெயரைக் குறிப்பிட்டபோது என்ன நடந்தது? அவரது சொந்த நண்பர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ்காரர்கள் சிலர் எனது கட்சியை அழிக்க நினைத்தபோது, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எனது ஆதரவை பா.ஜ.க.வுக்கு வழங்க முடிவுசெய்தேன். அது ஒன்றே காரணம். தனிப்பட்ட நலனுக்காக நான் அப்படி செய்யவில்லை. இதற்கு பலனாக பிரதமர் மோடி காட்டிய அன்பும், பாசமும்தான் எனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News