VIDEO: 72வது உலக அழகிப் போட்டி ஐதராபாத்தில் கோலாகலமாக தொடக்கம்.. மேடையில் ஒய்யார நடைபோட்ட அழகிகள்!
- பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட தெலுங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.
- 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் வந்துள்ளனர்.
72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்கியது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மிஸ் வேர்ல்ட் லிமிடெட் தலைவர் ஜூலியா மோர்லி சிபிஇ மற்றும் தற்போதைய மிஸ் வேர்ல்ட் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பழங்குடி நடன நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்கானாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் வெளிப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்கிறார்.
தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போட்டியாளர்களும் விதவிதமான உடைகளில் ஒய்யாரமாக மேடையில் நடைபோட்டனர். 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுப் போட்டி நடக்கிறது.
மிஸ் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஜூலியா மோர்லி, "பாரம்பரியம் புதுமையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்த இடமான தெலுங்கானாவிற்கு மிஸ் வேர்ல்ட் விழாவைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு போட்டி உலக ஒற்றுமை, அமைதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் உணர்வைப் பிரதிபலிக்கிறது' என்று கூறினார்.
மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்த விழா, பல்வேறு கலாச்சார, ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. வரவிருக்கும் பயணத்திட்டத்தில் மே 12 அன்று நாகார்ஜுனசாகரில் உள்ள புனித புத்தவனத்திற்கு வருகை தருவதும், அதைத் தொடர்ந்து மே 13 அன்று சார்மினார் மற்றும் லாட் பஜாரில் பாரம்பரிய நடைப்பயணம் நடத்துவதும் இடம்பெறும்.
போட்டியாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க சௌமஹல்லா அரண்மனையில் நடைபெறும் அரச வரவேற்பு விருந்திலும், இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்கள்.