இந்தியா

பாலஸ்தீன மக்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது - மோடி இஸ்ரேல் பயணத்தை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்

Published On 2026-02-24 21:25 IST   |   Update On 2026-02-24 21:25:00 IST
  • காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமற்ற வகையில் இன்னும் தொடர்கின்றன.
  • மோடியின் உரையைப் புறக்கணிக்க இஸ்ரேல் எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அழைப்பை ஏற்று, நாளை (பிப்ரவரி 25) முதல் 26 வரை இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.

இந்நிலையில் மோடி அரசு பாலஸ்தீன மக்களைக் கைவிட்டுவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

காங்கிரஸ் எம்.பி மற்றும் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றி கட்டாய இடம்பெயர்வு செய்வது தீவிரமடைந்துள்ளது. இது உலகளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமற்ற வகையில் இன்னும் தொடர்கின்றன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளன.

ஆயினும்கூட, பிரதமர் நாளை இஸ்ரேலுக்குச் செல்கிறார். இதில் அதானி தொடர்பும் உள்ளது. அங்கு, கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவரது உற்ற நண்பர் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார்.

இஸ்ரேலில் நீதித்துறையின் சுதந்திரத்தை நேதன்யாகு எவ்வாறு அழித்து வருகிறார் என்பதை எதிர்த்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரையைப் புறக்கணிக்க இஸ்ரேல் எதிர்க்கட்சி முடிவெடுத்துள்ளது.

பாலஸ்தீனியர்களின் நலன் குறித்து மோடி அரசாங்கம் இழிவான வகையில் பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறது.

உண்மை என்னவென்றால், மோடி அரசாங்கம் அவர்களைக் கைவிட்டுவிட்டது. நவம்பர் 18, 1988 அன்று பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஆரம்பகால நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மோடி அரசு மறந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். 

காசாவின் மேற்கு கரையை முழுவதும் ஆக்கிரமிக்க அண்மையில் இஸ்ரேல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News