உ.பி.யில் பழைய பேப்பர் கடைக்கு விற்கப்பட்ட 13,000 அரசுப் பள்ளி புதிய பாடப்புத்தகங்கள்
- ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- 2026-2027 கல்வியாண்டிற்காக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.
உத்தரப் பிரதேசத்தில் 13,000 அரசுப் பள்ளி பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிப்ரவரி 17 அன்று, பழைய பேப்பர் வியாபாரி ஒருவர் அரசுப் பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக வாங்கி, ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அண்டை மாவட்டமான லக்கிம்பூரில் அந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
2026-2027 கல்வியாண்டிற்காக 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.
அவை சட்டவிரோதமாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படவிருந்தது தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளான ஷபீக் அகமது மற்றும் அலோக் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் சிங் மற்றும் பயிற்றுவிப்பாளர் அதுல் குமார் சிங் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பழைய பேப்பர் வியாபாரி மற்றும் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் லாரியில் பிடிபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.