இந்தியா

எப்ஸ்டீன் கோப்புகளை விடவா வெட்கக்கேடு?.. இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தை விமர்சித்த மோடிக்கு ராகுல் பதிலடி

Published On 2026-02-24 15:17 IST   |   Update On 2026-02-24 15:17:00 IST
  • இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
  • அந்த ரகசிய ஒப்பந்தமே நாட்டிற்குப் பெரிய அவமானம்.

டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை ஏஐ தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உலக தொழில்நுட்ப மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் 20 ஆம் தேதியன்று காங்கிரஸ் இளைஞரணியினர் நுழைந்து தங்கள் மேலாடையை கழற்றி, இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அங்கிருந்து வெளியேயற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் இன்று கைது செய்யப்பட்டார். 

நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்வொன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்த சம்பவம் காங்கிரசின் தரம் தாழ்ந்த அரசியல் என்றும், அவர்களின் நிர்வாணம் ஏற்கனவே மக்களுக்கு தெரியும் என்பதால் அதை அவர்கள் காட்ட தேவையில்லை என்றும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நிர்வாண அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நரேந்திர மோடி அவர்களே, அஹிம்சை வழியிலான அமைதிப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை. எங்கள் தொண்டர்கள் சட்டையைக் கழற்றிப் போராடுவது வெட்கக்கேடு என நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆனால், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் நண்பரின் பெயர் மற்றும் உங்கள் மத்திய அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருப்பதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியுமா?.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் நீங்கள் நாட்டை விற்றுவிட்டீர்கள். அந்த ரகசிய ஒப்பந்தமே நாட்டிற்குப் பெரிய அவமானம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தில் போராடும் உரிமையை அவமதிக்க வேண்டாம், காந்தி மற்றும் பகத் சிங் காட்டிய போராட்ட வழியையே தொண்டர்கள் பின்பற்றுவதாகவும், இதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு துன்புறுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி செல்வந்தர்களுக்கு போகப்பொருளாக்கும் உலகளாவிய பாலியல் நெட்வொர்க்கை நடத்தி வந்த மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சேமித்து வைத்திருந்த ஆவணங்களின் ஒரு பகுதி அண்மையில் வெளியாகி இருந்தன.

இதில் பிரதமர் மோடி 2017 இல் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டபோது அமெரிக்க அதிபருக்கு தேவையானதை செய்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல மத்திய அமைச்சர் ஹர்திக் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோர் எப்ஸ்டீன் உடன் நடத்திய உரையாடல்களும் வெளியான கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.

தான் எப்ஸ்டீனை அரசுப் பிரதிநிதிகளுடன் பணி நிமித்தமாக 3-4 முறை மட்டுமே சந்தித்தாக ஹர்திக் சிங் புரி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News