தீப்பிடித்து எரிந்த வீடு.. 5 குழந்தைகள், 1 பெண் உயிரிழப்பு
- வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
- இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மீரட்டில் உள்ள இக்பால் என்பவரது வீட்டில் தரைத்தளம் துணிகளை சேமித்து வைக்கும் கிடங்காகவும், மேல்தளம் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நேற்று மாலை இக்பாலும் அவரது சகோதரரும் தொழுகைக்காக வெளியே சென்றிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
மேல்தளத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தீ பரவியது. வெளியேறும் பாதையில் தீயும் புகையும் சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
வீடு அமைந்திருந்த பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை. நீண்ட தூரத்தில் வாகனங்களை நிறுத்தி, குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர்.
பாதுகாப்புக்காக ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கதவுகளால், உள்ளே இருந்தவர்களால் வெளியே குதிக்கவோ அல்லது பொதுமக்கள் உள்ளே சென்று காப்பாற்றவோ முடியவில்லை. இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின் கசிவு காரணமா அல்லது கிடங்கில் இருந்த துணிகளில் தீ பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி கிடங்கு நடத்தியதற்காகவும், அங்கு தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் வீட்டின் உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயமடைந்த மற்றொரு நபர் மீரட் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.