இந்தியா

ஆந்திராவில் செம்மரம் கடத்திய கள்ளக்குறிச்சி வாலிபர் கைது

Published On 2023-05-24 04:58 GMT   |   Update On 2023-05-24 04:58 GMT
  • செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.
  • தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என தெரியவந்தது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் டிஐஜி செந்தில் குமார் உத்தரவின்படி, அதிரடிப்படை டிஎஸ்பி செஞ்சுராஜூ தலைமையில் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை மண்டலம் எஸ்ஆர் பாலம் ரோல்லமடுகு பகுதியில் சோதனை நடத்தினர்.

சாலமக்குள பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.அதிரடிப்படை போலீசாரை பார்த்ததும் செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோடூர் துணைக் கட்டுப்பாட்டு நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கிருபானந்தாவைச் சேர்ந்த அல்லிபாஷா குழுவினர் ராஜாம்பேட்டை எல்லைக்குட்பட்ட தும்மலபைலு பகுதியில் சோதனை நடத்தினர்.

அவர்கள் கலிகிரி கோனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சிலர் செம்மரங்களை வெட்டி தூக்கி சென்றதை கண்டனர்.

அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது, செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

விசாரணை நடத்தியதில், அவர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 47) என தெரியவந்தது.

அங்கு கிடந்த 10 செம்மரங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News