இந்தியா
null

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது காரை ஏற்றி கொன்ற டிரைவர்

Published On 2023-12-18 05:50 GMT   |   Update On 2023-12-18 06:18 GMT
  • சிகிச்சை பலனின்றி குழந்தை அர்பினா பரிதாபமாக இறந்தது.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர்:

பெங்களூர், பெல்லந்தூர் கசுவினஹள்ளியில் உள்ள சம்ரித்தி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கடந்த 10-ந்தேதி ஜோக் ஜூடர் மற்றும் அனிதா தம்பதியின் 3 வயது குழந்தை அர்பினா விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது உடல் முழுக்க பலத்த காயங்களுடன் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு பெற்றோர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு அர்பினா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அர்பினா பரிதாபமாக இறந்தது.

இது குறித்து பெல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீசார் அடிக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். அதில் கார் ஒன்று குழந்தை அர்பினா மீது மோதி உள்ளது தெரியவந்தது.

சம்பவத்தன்று குடியிருப்பின் முன்பு சந்தோஷமாக அர்பினா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு காரில் வந்த டிவைர் சுமன் குழந்தை மீது காரை ஏற்றினார். இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையின் முதுகில் காரை ஏற்றியபோது குழந்தை எழுந்திருக்க முடியாமல் வலியில் துடிதுடித்து கதறியது. அந்த குழந்தையை காப்பாற்ற முன்வராமல் காருடன் டிரைவர் தப்பி சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த விபத்து சம்பவம் குறித்து தெரியாமல் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், குழந்தையின் உடலில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில் இந்த பயங்கர காட்சி வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து டிரைவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது தெரிந்ததால் டிரைவர் சுமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News