இந்தியா

நாளை மறுநாள் ராமர் சிலை பிரதிஷ்டை: அயோத்தி கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு

Published On 2024-01-20 15:09 IST   |   Update On 2024-01-20 15:09:00 IST
  • பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை நடத்த உள்ளார்.
  • முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அயோத்தி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

அந்த ஆலயத்தின் தரைதளத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) 5 வயது பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மைசூருவை சேர்ந்த சிற்பி செய்துள்ள அந்த சிலை தற்போது கருவறையில் பீடத்தில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

முக்கிய நிகழ்ச்சியான சிலை பிரதிஷ்டை 22-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.20 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை நடத்த உள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு 7 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். மீதமுள்ள சுமார் 5 ஆயிரம் பேர் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். இதனால் 22-ந்தேதி அயோத்தி மாநகரம் மிகப் பெரிய விழா கோலத்தை எதிர்நோக்கி உள்ளது.

பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் ஒரே இடத்தில் பங்கேற்க இருப்பதால் அயோத்தியில் அதிநவீன கருவிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலய கருவறைப் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.

அவர்களுக்கு பிறகு 2-வது அடுக்கில் மத்திய துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 3-வது அடுக்கில் உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

முதல் அடுக்கில் இருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையில் 100 கமாண்டோ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நன்கு குறிபார்த்து சுடும் வல்லமை பெற்றவர்கள். மேலும் அனைத்து வகையான நவீன கருவிகளையும் கையாள பயிற்சி பெற்றவர்கள்.

ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் துணைநிலை ராணுவ வீரர்கள் 1,400 பேர் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆலய வளாகம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே உத்தரபிரதேச மாநில உள்ளூர் போலீசார் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள். அயோத்தி நகரம் முழுக்க உள்ளூர் போலீசார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும்.

முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர பேரிடர் மீட்பு குழுவினரும் உத்தரபிரதேசம் முழுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் சிறப்பு பேரிடர் மீட்பு குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த குழு இயற்கை சீற்றங்களின்போது எத்தகைய ஆபத்து ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அவர்களும் நவீன கருவிகளுடன் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ராமர் சிலையின் உயரம்

4.25 அடி

அகலம்

3 அடி

மொத்த எடை

1.5 டன்

மூலவர் சிலை ராமரின் வயது

5

மூலவரின் தோற்றம்

பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகள்.

சிலை வடிவமைக்கப்பட்ட கல்

கர்நாடகத்தின் கருப்பு பாறைகளில் இருந்து செதுக்கப்பட்டது.

அடித்தளம்

தாமரையில் ராமர் நிற்பது போன்ற வடிவம்.

ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில் அமைந்துள்ளவை

தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்ரம், கதாயுதம், சூரியன், சந்திரன்.

சிலையைச் செதுக்கியவர்

மைசூருவைச் சேர்ந்த அருண் யோகிராஜ்.

 

Tags:    

Similar News