இந்தியா

"அனைவரையும் அழைக்க வேண்டாமா?": சல்மான் குர்ஷித் காட்டம்

Published On 2023-10-26 08:27 GMT   |   Update On 2023-10-26 10:35 GMT
  • 2020, ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
  • இது ஒன்றும் ஒரு தனி நபர் நிகழ்ச்சி அல்ல என்றார் குர்ஷித்

உலகெங்கும் உள்ள இந்துக்களின் தெய்வமான ஸ்ரீஇராமபிரான் அவதரித்த தலமான அயோத்தியில் அவருக்கு ஒரு மிக பிரமாண்ட ஆலயத்தை கட்ட முடிவு செய்து 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா" (Shri Ramjanmabhoomi Teerth Kshetra) எனும் ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அவை முடியும் தறுவாயில் உள்ளன.

2020, ஆகஸ்ட் 5 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டி, கட்டிட திருப்பணிகளை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பகவான் ஸ்ரீஇராமரின் விக்கிரகம் அடுத்த வருடம் ஜனவரி 22 அன்று இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு டிரஸ்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்", என கடந்த அக்டோபர் 22 அன்று இந்த டிரஸ்டின் பொது செயலாளர் சம்பத் ராய் (Champat Rai) தெரிவித்தார்.

"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என இந்த அழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த அழைப்பு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

ஒரு கட்சிக்கு (பா.ஜ.க.) மட்டும் தான் அழைப்பிதழா? யார் வருவார்கள், வர மாட்டார்கள் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால், 'கடவுள்' ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் உரியவராகி விட்டாரா என்ன? அனைத்து கட்சியினரையும் பாகுபாடு இன்றி அழைக்க வேண்டாமா?. இந்த முக்கிய விழா ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான நிகழ்வாக மாறி விட்டது. இது ஒரு கட்சி நிகழ்வோ, தனி நபர் நிகழ்ச்சியோ அல்ல. அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு குர்ஷித் கூறினார்.

குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத உறவினர்கள் "எனக்கு ஏன் அழைப்பு வைக்கவில்லை?" என குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பயனர்கள் குர்ஷித்தின் கருத்து குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News