தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம்: தடுப்பு வேலியைத் தாண்டி குதித்த அகிலேஷ் யாதவ்
- தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியதால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அகிலேஷ் யாதவை போலீசார் கைது செய்தனர்.