இந்தியா
null

இந்தியாவில் ரூ.1 கோடி.. அமெரிக்காவில் ரூ.260 கோடி இழப்பீடு.. எங்கு சாகிறோம் என்பதை பொறுத்தா உயிரின் மதிப்பு?

Published On 2026-02-15 12:59 IST   |   Update On 2026-02-15 12:59:00 IST
  • இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது.
  • ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.

மனித உடல் என்பது ஒரே மாதிரியான கூறுகளால் ஆனது. ஆனால் மனித உயிரின் மதிப்பு என்பது எந்த காலத்திலும் சமமாக இருந்ததில்லை. சமூகத்தின் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அது இருந்திருக்கிறது.

நவீன காலத்தில் அரசுகள் மனிதன் வாழ்வதற்கான உரிமையை சமமாக வழங்குவதாக கூறுகின்றன. அனைத்து நாட்டு அரசியலமைப்புகளிலும் அந்த வரி இருக்கிறது.

உணவு, மருத்துவம் உள்ளிட்ட அதற்கான திட்டங்களும் அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சமூகம் இன்னும் பரபட்சமானதாகவே இருந்து வருகிறது. ஒரு நாட்டுக்குள் இருக்கும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதை தாண்டி நாடுகளுக்கிடையேயான இடைவெளியும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடிமகனின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்கும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்போரின் உயிருக்கு இருப்பும் மதிப்புக்குமே பாரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தால் அது அந்த வாரத்தின் பரபரப்பாக மாறுகிறது.

ஆனால் சூடானில் கிளர்ச்சியாளர்களால் ஒரே கிராமத்தில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, குறைந்தபட்சம் பேசுபடுவதோ அல்லது உலகளவில் ஆவணமாவதோ கூட கிடையாது.


இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு பழிவாங்க காசாவில் 70,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் மற்றொரு உதாரணம்.

இது ஒரு புறம் இருக்க, அதிகாரம் மக்களின் உயிரின் மீது எத்தனை மதிப்பளிக்கிறது என்பதுமே கேள்விக்குரிய ஒன்றே.

ஒரு விபத்து நிகழ்ந்தால் உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என அறிவிக்கப்டுகிறதே தவிர அதுபோன்ற விபத்து அல்லது தவறுகளை அடுத்து நிகழாமல் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசுகள் தரப்பில் நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ளப்டுகிறதா என்பது பெரிய கேள்விக்குறியே.

மனித உயிர் விலைமதிப்பற்றது. இருப்பினும் இழப்பீடு என்பது உயிரிழந்தவரின் வெற்றிடத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள குடும்பத்திற்கு தேவை என்பதும் மறுக்க முடியாதது.

இதன் அடிப்படையில் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்படுகிறது என்பது ஒரு உயிருக்கு அதிகாரம் எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வகையில் அண்மையில் இழப்பீடு குறித்து வந்த 2 செய்திகள் ஒப்புநோக்கத்தக்கவை.

ஒன்று கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 260 பேருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு.

ஏர் இந்தியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

எனவே உயிரிழந்த 260 பேருக்கும் தலா ரூ.1கோடி வீதம் இழப்பீடாக மொத்தம் ரூ.260 கோடி வழங்கப்படுகிறது.

மற்றொரு செய்தி, அமெரிக்காவில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த 23 வயது இந்திய மாணவி ஜான்வி கண்டுலா குடும்பத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணம்.

கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம், ஜான்வியின் குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி வாகனத்தை சுமார் 119 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே ஜான்வியின் உயிரிழப்புக்கு காரணம்.

எனவே எந்த தவறும் செய்யாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு பொருத்தமானது என அந்நாட்டு நீதிமன்றம் கருதியது.

அகமதாபாத் விமான விபத்திலும் பயணிகள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் அவர்களின் உயிருக்கு மதிப்பு ரூ.1 கோடி என்று முடிவுகட்டபடுகிறது. ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.  

Tags:    

Similar News