இந்தியா

தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றி விட்டால், அடுத்து குரங்குகள் வரும் - மேனகா காந்தி

Published On 2025-08-12 12:33 IST   |   Update On 2025-08-12 12:33:00 IST
  • தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது
  • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய விலங்கு நல ஆர்வலரும் பாஜக முன்னாள் எம்.பி.யுமான மேனகா காந்தி, "டெல்லியில் லட்சக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. அனைத்து வசதிகளுடன் காப்பகம் உருவாக்க ரூ.15,000 கோடி தேவைப்படும். அதற்கு சாப்பாடு போட வாரம் ரூ.5 கோடி வேண்டும். இது சாத்தியமா?. நாய் கடித்து சிறுமி உயிரிழந்ததாக ஏதோ ஒரு போலிச் செய்தியை வைத்து, உச்ச நீதிமன்றம் கோபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றி விட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News