இந்தியா

ஷோரூம் முன்பு சொந்த ரிக்ஷாவை தீ வைத்து எரித்த பெண்

Published On 2026-02-07 12:52 IST   |   Update On 2026-02-07 12:52:00 IST
  • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்‌ஷா வாங்கி உள்ளனர்.
  • இ-ரிக்‌ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சில மின்வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், அவற்றை பழுது நீக்கி கொடுப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வருவதில்லை என்றும் இணையத்தில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் நாராயன். இவரது மனைவி குடியா மஹூர். இவர்கள் இருவரும் இ-ரிக்ஷா ஓட்டி வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர். அதனை ஓட்டி வருமானம் ஈட்டி தங்கள் 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் வாங்கிய 2 மாதத்திலேயே இ-ரிக்ஷா சரியாக வேலை செய்யாமல் பழுதானது. இதுகுறித்து குடியா மஹூர் இ-ரிக்ஷா வாங்கிய நிறுவனத்தினிடம் புகார் செய்த போதும் அவர்கள் இ-ரிக்ஷாவில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்காமல் 4 மாதங்களாக அலைக்கழித்து வந்துள்ளனர்.

இ-ரிக்ஷாவில் பேட்டரி வெடித்துள்ளது. இதை நீங்கள் தான் புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மழுப்பலாக பதில் கூறி உள்ளனர். இதனால் இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது. இதனால் ரிக்ஷா வாங்குவதற்கு வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் குடியா மஹூர் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த குடியா மஹூர் சம்பவத்தன்று தனது இ-ரிக்ஷாவை ஷோரூம் கொண்டு சென்ற நிலையில் திடீரென ஆவேசமடைந்து ஷோரூம் முன்பு வைத்து இ-ரிக்ஷாவுக்கு தீ வைத்து எரித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்ததோடு, குடியா மஹூரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News