மனித வெடிகுண்டாக மாறி பாகிஸ்தான் செல்வேன்.. தற்கொலைத் தாக்குதலுக்கு தயார் என்கிறார் கர்நாடக அமைச்சர்
- கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மை நலன் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.
- ஒரு அமைச்சராக, பாகிஸ்தானுடன் போரை நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையில், கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மை நலன் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.
நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜமீர் அகமது கான், நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துஸ்தானிகள். பாகிஸ்தான் நம்முடன் எந்த உறவையும் கொண்டிருந்ததில்லை. பாகிஸ்தான் எப்போதும் நமக்கு எதிரியாக இருந்து வருகிறது.
ஒரு போர் நடந்தால், நான் தயாராக இருக்கிறேன். ஒரு அமைச்சராக, பாகிஸ்தானுடன் போரை நடத்த நான் தயாராக இருக்கிறேன். இந்தியாவின் சார்பாகப் போரில் பங்கேற்க நானே அங்கு செல்வேன்.
தேவைப்பட்டால், நான் ஒரு தற்கொலை குண்டுதாரியாகக் கூட மாறுவேன். நான் கிண்டல் செய்யவில்லை. நாட்டின் நலனுக்காக, மோடியும் அமித்ஷாவும் என்னை தற்கொலை குண்டுதாரியாக்கினால், நான் அந்த குண்டை அணிந்து பாகிஸ்தானுக்குச் செல்வேன் என்று அல்லாவிடம் சத்தியம் செய்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் ஒன்றுபட வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புக்காக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.