ஐரோப்பிய கார்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி 40 சதவீதமாக குறைப்பு- ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது
- நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
- வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட விலைக்கு மேல் (சுமார் ரூ. 16.3 லட்சம் ) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உடனடியாக வரிகள் குறைக்கப்படும்.
காலப்போக்கில், இந்த கார்களுக்கான வரி 10 சதவீதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இடையூறுகள் குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது இந்தியாவின் வாகனச் சந்தையைத் திறப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வாகன உற்பத்தியாளர்களான வோக்ஸ்வாகன், மெர்சி டிஸ்-பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. போன்ற நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கும்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 4 நாள் இந்தியப் பயணத்தில் இருக்கும்போதே இந்த தகவல் வந்துள்ளது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பல முக்கிய முயற்சிகளை உறுதிப்படுத்துவதாகும்.
வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும், வர்த்தக பேச்சுவார்த்தைக ளுக்காகவும் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் நாளை பிரதமர்மோடியுடன் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.