இந்தியா

அமித்ஷாவை அவதூறாக பேசியதாக வழக்கு: ராகுல்காந்திக்கு உ.பி. கோர்ட்டு சம்மன்

Published On 2023-11-28 14:58 IST   |   Update On 2023-11-28 15:42:00 IST
  • ராகுல்காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
  • அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

சுல்தான்பூர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.

அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது உத்தரபிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

அதில் ராகுல்காந்தி, வருகிற 16-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் மிஸ்ரா கூறும்போது, "இந்த சம்பவம் நடந்தபோது பா.ஜனதா துணைத்தலைவராக இருந்தேன். பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்துள்ளது" என்றார்.

மேலும் விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறும்போது, "ராகுல்காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்றார்.

ஏற்கனவே மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையை சூரத் கோர்ட்டு விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News