குடியரசு தின அலங்கார ஊர்தி: தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா?
- டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
- இதில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடந்தது. அதில் நாட்டின் பன்முக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் 9 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.
இதற்கிடையே, சிறப்பான ஊர்திகளை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர். ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் இடம்பிடித்த, 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் 3-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
கைவினை மற்றும் கைத்தறித் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடமும் பிடித்தது.