செய்திகள்

அவதூறு துண்டு பிரசுரம்: குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்- காம்பீர்

Published On 2019-05-11 06:03 GMT   |   Update On 2019-05-11 06:11 GMT
அவதூறு துண்டு பிரசுரம் செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று ஆம் ஆத்மி வேட்பாளருக்கு காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி:

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி எம்.பி. தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷியும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங் லல்வியும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் காம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் கூறி இருந்தார். காம்பீர் வினியோகித்த துண்டு பிரசுரத்தில் தன்னை பற்றி மோசமாக அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

காம்பீர் சார்பில் வெளியிடப்பட்ட லட்சக் கணக்கான துண்டு பிரசுரத்தில் தனது ஒழுக்கம் குறித்து மோசமான வகையில் அவதூறு வார்த்தையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக அதிஷி கண்ணீர் மல்க தெரிவித்தார். இத்தகைய எண்ணத்துடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று காம்பீர் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-


கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறாரா?

இவ்வாறு காம்பீர் கூறினார்.

மேலும் தன் மீது அவதூறு கூறியது தொடர்பாக அவர் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News