செய்திகள்

நோட்டா ஓட்டால் தோல்வியடைந்த 4 பாஜக மந்திரிகள்

Published On 2018-12-13 07:35 GMT   |   Update On 2018-12-13 07:35 GMT
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டா ஓட்டால் தோல்வியை தழுவினார்கள். #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
போபால்:

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளாகும். மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை.

காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 தொகுதியையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ்-2, சமாஜ்வாடி-1 சுயேட்சை-4 இடங்களில் வெற்றி பெற்றன.

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு நோட்டாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 22 தொகுதிகளில் பா.ஜனதா குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு நோட்டா முக்கிய பங்கு வகித்தது.

பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டாவால் வெற்றியை இழந்து தோல்வியை தழுவினார்கள்.



குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை மந்திரி நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டில் தோற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1550 வாக்குகள் கிடைத்தது. தமோ தொகுதியில் நிதி மந்திரி ஜெயந்த் மல்லையா 799 வாக்கில் தோற்றார். இங்குநோட்டாவுக்கு 1,299 ஓட்டுகள் கிடைத்தது.

ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரதுறை இணை மந்திரி சரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாத்திலும், (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி 5,120 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 5,700) தோற்றனர்.

இதேபோல காங்கிரசுக்கும் சில தொகுதிகளில் நோட்டாவால் பாதிப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு மொத்தம் 5.4 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது. இது 1.4 சதவீதம் ஆகும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 5-வது இடம் கிடைத்தது.

பா.ஜனதா 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளும், பகுஜன் சமாஜ் 5 சதவீத ஓட்டுகளும், ஜி.ஜி.பி. கட்சி 1.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதற்கு அடுத்த இடத்தில் நோட்டா இருக்கிறது. சமாஜ்வாடி ((1.3 சதவீதம்), ஆம் ஆத்மி (0.7 சதவீதம்) ஆகிய கட்சிகள் நோட்டாவுக்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
Tags:    

Similar News