செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்- அகமது படேல் மனுவை மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2018-09-26 10:34 GMT   |   Update On 2018-09-26 10:34 GMT
மாநிலங்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக அகமது படேல் தாக்கல் செய்த மனு மீது மறுபரிசீலனை செய்யும்படி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும்படி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. #RajyaSabhaElection #AhmedPatel
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் பல்வந்த்சிங் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடினார்.

காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அவர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனால் அகமது படேல் வெற்றி பெற்றதாகவும், அந்த வாக்குகளை கணக்கில் சேர்த்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் ராஜ்புத் தனது மனுவில் கூறியிருந்தார். எம்எல்ஏக்களுக்கு அகமது படேல் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.


அதன்பின்னர் ராஜ்புத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அகமது படேலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அகமது படேல் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் அகமது படேல் வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, அகமது படேல் மனு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு கூறினர். எனவே, அகமது படேல் மனு மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RajyaSabhaElection #SupremeCourt #AhmedPatel #GujaratHighCourt
Tags:    

Similar News