செய்திகள்

இந்திய வீரர்களை கொல்வதற்கு பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தாரா சித்து? - பா.ஜ.க கடும் தாக்கு

Published On 2018-08-18 14:18 GMT   |   Update On 2018-08-18 14:18 GMT
இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் தலைமை தளபதியை பஞ்சாப் மந்திரி சித்து கட்டியணைத்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Pakistan #ImranKhan #Congress #BJP #Punjab #NavjotSinghSidhu
அகமதாபாத்:

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். இவரது பதவியேற்பு விழாவுக்கு அவரது நண்பரும், பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மன்சூன் கானுக்கு அருகே சித்துவுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, அந்த பதவியேற்பு விழாவில் அந்நாட்டின் தலைமை தளபதியுடன் சித்து கட்டியணத்து கலந்துரையாடினார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மந்திரியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஷ்வைத் மாலிக், சித்துவின் இந்த செயல் வெட்கக்கேடான செயல் என கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜனாதிபதி அருகே அளிக்கப்பட்ட இருக்கையை சித்து ஏன் மறுக்கவில்லை? எனவும் வினவியுள்ளார்.



தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொல்லப்படும் இந்த நேரத்தில் அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதியை சித்து கட்டியணைத்ததன் மூலம், இந்திய வீரர்களை கொன்றதற்கு நன்றி தெரிவித்தாரா? என ஷ்வைத் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு சித்து நிச்சயம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியும் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், சித்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் நல்லொழுக்கத்தை தகர்த்து விட்டார் என சாடியுள்ளது.

காங்கிரஸ் மந்திரி நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயலுக்கு  பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. #Pakistan #ImranKhan #Congress #BJP #Punjab #NavjotSinghSidhu
Tags:    

Similar News