செய்திகள்
காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம் - பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #FarooqAbdullah #MehboobaMufti
ஸ்ரீநகர் :
தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம், சட்டசபையை கலைத்துவிட்டு மக்கள் ஜனநாயகத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். கவர்னர் ஆட்சியை எப்போதும் எங்கள் கட்சி ஆதரித்தது இல்லை ஆனாலும் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சியினால் குழப்பத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தை அமைதியை நோக்கி திருப்ப கவர்னர் ஆட்சி ஒன்றே வழி.
முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங், ராணுவ வெடிமருந்து சேமிப்பு கிடங்கு அருகே 12 ஏக்கர் பரப்பளவில் வீடு கட்ட கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவம் காஷ்மீர் மாநில உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்ட விரோதமாக நிலம் வாங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் முன்னாள் சட்டசபை சபாநாயகர் குப்தா ஆகியோர் மீது இதுவரை ஏன் முதல்வர் மெகபூபா முப்தி நடவடிக்கை எடுக்கவில்லை ? எதற்காக அவர் மவுனம் காக்கிறார் ? மாநிலத்தில் அரசு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத நிலையில் அரசாங்கம் என்ற ஒன்று உள்ளதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவினால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட காலகட்டமான 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மாநிலம் சரியான திசையை நோக்கி பயணித்தது. எனவே, இப்போதும் காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளர். #FarooqAbdullah #MehboobaMufti