செய்திகள்

அதிமுக, பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயார் - கனிமொழி

Published On 2019-03-25 06:22 GMT   |   Update On 2019-03-25 06:22 GMT
அதிமுக, பாரதிய ஜனதாவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளதாக கனிமொழி எம்பி கூறியுள்ளார். #kanimozhi
விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கலைஞர் கருணாநிதி எப்போதும் சொல்லுவார், எனது குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்க முடியாது. என் குடும்பம் என்பது எல்லா தமிழர்களையும் அடக்கியது. தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இருந்தாலும் சரி, நமது கூட்டணி கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் சரி நாடும் நமதே 40-ம் நமதே என்ற உணர்வோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி மக்களை படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் கூலிப்படை போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. மோடியின் பெயரை சொன்னாலே மக்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று நன்கு தெரிகிறது.

விளாத்திகுளம் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.



இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விளாத்தி குளம்எட்டயபுரம் ரோட்டில் தேர்தல் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். #kanimozhi
Tags:    

Similar News