உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

Published On 2022-08-09 08:04 GMT   |   Update On 2022-08-09 08:04 GMT
  • 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
  • பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பல்லடம் :

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. இதுபோல் இந்தத் திட்டத்தில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கு பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய கோரியும் பி.ஏ.பி. திட்டம் உருவான போது விடுபட்டு போன ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வலியுறுத்தியும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயல்தலைவர் என்.எஸ்.பி. வெற்றி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,வட்டார தலைவர் வேலுமணி, நகர தலைவர் மைனர் தங்கவேல், கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் காவி.பழனிசாமி, எலவந்தி ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன்,வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி,உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இன்னும் 1 மாதத்திற்குள் இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் பொள்ளாச்சி பி.ஏ.பி அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலர், பல்லடம் தாசில்தார், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அத்துடன் முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமை நிலைய செயலாளர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு திட்டத்தை ரத்து செய்யக் கோரி பதிவுத்தபால் மூலமாகவும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News