உள்ளூர் செய்திகள்

மனைவியை கொல்ல ஆன்லைனில் விஷம் வாங்கிய வியாபாரி- கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்தவரை போலீசார் பிடித்தனர்

Published On 2022-11-09 06:58 GMT   |   Update On 2022-11-09 06:58 GMT
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.

கோவை:

கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.

அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.

இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News