உள்ளூர் செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி சீரழித்த கொடூரம்- 4 பேர் கைது

Published On 2022-10-29 14:27 IST   |   Update On 2022-10-29 14:27:00 IST
  • வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்தனர்.
  • வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர்.

ஆவடி:

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது தாயார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தாயார் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (வயது40) என்பவரே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்தனர். வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர். ஆனால் குடும்ப தகராறு காரணமாக 2 மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் தாய் விஜயா (67), சகோதரி லலிதா (42) ஆகியோர் தங்கி உள்ளனர்.

வீட்டு உரிமையாளர் என்பதால் சிறுமி, வெங்கடேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். இதில் சிறுமி மீது வெங்கடேசனுக்கு மோகம் ஏற்பட்டது. ஒருநாள் வெங்கடேசன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல் வெங்கடேசனின் உறவினர் வேங்கையன் (36) என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதே போல் வெங்கடேசனின் மேலும் 2 நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளது வாழ்க்கையை கொடூரமாக சீரழித்துள்ளனர்.

வெங்கடேசன் இதே போல் பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து ஆவடி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேசன், வேங்கையன், உடந்தையாக இருந்த விஜயா, லலிதா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News